Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவையின் முதன்மைச் செயலாளர் சீனிவாசன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் வழங்கியுள்ளார்.
2018ஆம் ஆண்டு சட்டமன்ற செயலகத்தின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்ட சீனிவாசன், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் பதவி நீட்டிப்புடன் அதே பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றினார்.
சட்டப்பேரவை செயலக பணிகளில் அனுபவம் மிக்க அதிகாரியாக அறியப்பட்ட அவர், முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமானவராகவும் கருதப்பட்டார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு பொறுப்பேற்ற பின்னரும் அவர் சட்டப்பேரவைச் செயலாளராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென பதவி விலகியிருப்பது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிமுக மற்றும் திமுக ஆட்சிக்காலங்களிலும் சட்டப்பேரவைச் செயலாளராக பணியாற்றிய சீனிவாசனின் பதவிக்காலம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், அந்த கால அவகாசம் நிறைவடையும் முன்பே அவர் தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் சாந்தி, அடுத்த முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam