Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 20 ஜூன் (ஹி.ச.)
திருநெல்வேலி மாநகரின் அடையாளமாகவும், பாண்டிய நாட்டின் பழம்பெரும் தலங்களில் ஒன்றாகவும் திகழும் அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த ஆன்மிகப் பெருவிழாவில், தினந்தோறும் சுவாமி நெல்லையப்பருக்கும் அன்னை காந்திமதிக்கும் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெறவுள்ளன.
விழா நாட்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.
ஆனித் திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வாக, ஒன்பதாம் திருநாளான ஜூன் 28-ம் தேதி மக்களின் பக்தி கோஷங்கள் விண்ணைப் பிளக்க நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது.
அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘தேரோடும் வீதியெல்லாம்’ பக்திப் பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுப்பார்கள்.
பத்தாம் நாள் விழாவில் தீர்த்தவாரி உற்சவத்துடன் இந்த ஆனிப் பெருந்திருவிழா நிறைவுபெறும். விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களை வரவேற்கத் தயாராகியுள்ளது.
திருவிழாவையொட்டி திருநெல்வேலி மாநகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளும், சிறப்பு போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b