Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 20 ஜூன் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வசந்தபுரம் பகுதியில் மினி சரக்கு ஆட்டோ மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சோழசிராமணி பகுதியைச் சேர்ந்த கோகுல்நாத் (19), திருச்செங்கோட்டில் உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து கிச்சன் டவல் பொருட்களை ஏற்றிக்கொண்டு கரூரில் உள்ள அபி ஸ்டார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்கு டாடா ஏசி மினி சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
கடந்த 18-ம் தேதி காலை சுமார் 9.30 மணியளவில் வசந்தபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிர்திசையில் பரமத்தி வேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கிச் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்புற சாலையில் நுழைந்ததாக கூறப்படுகிறது.
குமாரபாளையத்தைச் சேர்ந்த தனசேகரனின் மனைவி ஆர்த்தி ஓட்டி வந்த கார், எதிரே வந்த மினி சரக்கு ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியதில் பலத்த விபத்து ஏற்பட்டது.
இதில் ஆட்டோ ஓட்டுநர் கோகுல்நாத் இடது கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்தார். கார் ஓட்டிய ஆர்த்திக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.
விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து, காயமடைந்த இருவரையும் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற கோகுல்நாத், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நல்லூர் காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், விபத்து நிகழ்ந்த தருணம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கார் திடீரென எதிர்புற பாதையில் நுழைந்து மினி ஆட்டோ மீது மோதும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P