Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை பணிகளை அரசு–தனியார் பங்களிப்பு (PPP) முறையில் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசனை நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
ஆவடி, ஓசூர், தாம்பரம், வேலூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் குப்பை சேகரிப்பு, போக்குவரத்து மற்றும் மேலாண்மை பணிகளை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு, தொழில்நுட்ப மற்றும் நிதி ஆய்வு அறிக்கைகளை தயாரிக்க ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த ஆய்வின் மூலம், குப்பை சேகரிப்பு மற்றும் அவற்றை கிடங்குகள் அல்லது செயலாக்க மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளை அரசு கண்காணிப்பில் தனியாரிடம் ஒப்படைக்க முடியுமா, அதற்கான நிர்வாக நடைமுறைகள் என்ன, நிதி ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் அது சாத்தியமா, சட்ட ரீதியான அம்சங்கள் என்ன என்பன குறித்து விரிவாக மதிப்பீடு செய்யப்படும்.
இதற்காக தேர்வு செய்யப்படும் ஆலோசனை நிறுவனம், அரசு–தனியார் பங்களிப்பு முறையில் தூய்மை பணிகளை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் (DPR) தயாரித்து வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ