Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூன் (ஹி.ச.)
சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கு திசையில், வங்கக்கடலில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் பரவலான மேகக் கூட்டம் நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மேகத் திரட்சி காரணமாக சென்னையில் தற்போது நிலவும் வானிலையை விட அதிக அளவில் மேகமூட்டம் காணப்படுவதுடன், காற்றில் ஈரப்பதமும் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக கடலோர பகுதிகளில் வலுவான கடற்காற்று வீசுவதால் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகமூட்டமான வானிலை நிலவுவதால், இன்று சென்னையின் பகல்நேர வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, சற்று குளிர்ச்சியான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், நகரின் ஓரிரு பகுதிகளில் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கனமழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேகமூட்டம் அதிகரிப்பால் சென்னையில் இன்று இதமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ