Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூன் (ஹி.ச.)
சென்னை மாநகரில் வசிக்கும் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்ய வழிவகுக்கும் டோக்கன்கள் நாளை முதல் வழங்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஆறு மாத காலத்திற்கு பயன்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாதமும் 10 டோக்கன்கள் வீதம் மொத்தம் 60 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த டோக்கன்களை பயன்படுத்தி மூத்த குடிமக்கள் எம்.டி.சி. பேருந்துகளில் எந்தவித கட்டணமும் இன்றி பயணம் செய்யலாம்.
டோக்கன் பெறுவதற்கான சிறப்பு முகாம் ஜூன் 21 ஆம் தேதி தொடங்கி ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறும்.
விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை பொதுமக்கள் டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய போக்குவரத்து பணிமனைகளான அடையாறு, சைதாப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஆவடி மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய ஐந்து இடங்களில் டோக்கன் விநியோகம் நடைபெறுகிறது.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களது வயது மற்றும் முகவரிச் சான்றுடன் நேரில் சென்று டோக்கன்களை பெற்றுக்கொள்ளுமாறு மாநகரப் போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இத்திட்டம் மூத்த குடிமக்களின் பயணச் சுமையை குறைத்து, அவர்களின் அன்றாட வாழ்வுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b