பிரதமர் மோடி தலைமையில் நாளை உள்நாட்டு போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் இணைப்பு விழா
கொல்கத்தா, 20 ஜூன் (ஹி.ச) இந்திய கடற்படையின் வலிமையை மேலும் பெருக்கும் வகையில், முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட மூன்று முன்னணி போர்க்கப்பல்களான துனகிரி, சன்சோதக் மற்றும் அக்ரே ஆகியவை நாளை (ஜூன் 21-ம் தேதி) மேற்கு
Induction ceremony of indigenous warships


கொல்கத்தா, 20 ஜூன் (ஹி.ச)

இந்திய கடற்படையின் வலிமையை மேலும் பெருக்கும் வகையில், முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட மூன்று முன்னணி போர்க்கப்பல்களான துனகிரி, சன்சோதக் மற்றும் அக்ரே ஆகியவை நாளை (ஜூன் 21-ம் தேதி) மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடற்படையில் முறைப்படி இணைக்கப்பட உள்ளன.

கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நாளை காலை சுமார் 9.15 மணியளவில் இந்த மூன்று கப்பல்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து, கடற்படையில் இணைத்து வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து அவர் விழாவில் உரையாற்ற உள்ளார்.

இந்த கப்பல்கள் அனைத்தும் இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவால் வடிவமைக்கப்பட்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டவை.

கடல்சார் போர், நீரியல் ஆய்வு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஆகியவற்றில் இந்த மூன்று கப்பல்களும் முக்கிய செயல்பாட்டு திறன்களை பிரதிபலிக்கின்றன.

ஆழ்கடல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவது, கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து கடலோர நீர்ப்பரப்பை பாதுகாப்பது ஆகியவற்றில் கடற்படையின் சமநிலையான திறன் மேம்பாட்டு அணுகுமுறையை இவை வெளிப்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துனகிரி, புராஜெக்ட் 17ஏ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஐந்தாவது ரகசிய போர்க்கப்பல் ஆகும். பிரம்மோஸ் கடல்-கடல் ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தூர கடல்-வான் ஏவுகணை அமைப்பு உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்களைக் கொண்ட இந்த கப்பல், கடற்படையின் போர் திறனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது.

சன்சோதக், நான்காவது பெரிய ரக கணக்கெடுப்பு கப்பல் ஆகும். கடலோர மற்றும் ஆழ்கடல் நீரியல் ஆய்வுகள் மேற்கொள்வதற்காகவும், பாதுகாப்பு மற்றும் சிவில் பயன்பாடுகளுக்கான கடல்சார் மற்றும் புவி இயற்பியல் தரவுகளை சேகரிப்பதற்காகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தகவலின்படி, தானியங்கி நீருக்கடி வாகனங்கள் மற்றும் தொலைதூரத்தில் இயக்கப்படும் வாகனங்கள் உள்ளிட்ட நவீன ஆய்வு அமைப்புகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

அக்ரே, அர்னாலா வகுப்பைச் சேர்ந்த நான்காவது நீர்மூழ்கி எதிர்ப்பு ஆழமற்ற நீர் கப்பல் ஆகும். கரையோர நீர்ப்பகுதிகளில் நீருக்கடி அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து தாக்குவதற்காக இலகுரக டார்பிடோக்கள், உள்நாட்டு ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ஆழமற்ற நீர் சோனார் அமைப்புகளை இது கொண்டுள்ளது.

இந்த மூன்று கப்பல்களும் 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதால், இந்தியாவின் கப்பல் கட்டும் திறனின் வளர்ந்து வரும் முதிர்ச்சியை இவை எடுத்துக்காட்டுகின்றன.

இவற்றின் கட்டுமானத்தில் 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட இந்திய தொழில்துறையின் பரவலான பங்களிப்பு இருந்துள்ளது. இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளும் பெருமளவில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசு, இந்திய கடற்படை, பொதுத்துறை கப்பல் கட்டும் தளங்கள், தனியார் தொழில்துறை மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் கூட்டு முயற்சியை இந்த கப்பல்களின் இணைப்பு வெளிப்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b