Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூன் (ஹி.ச.)
மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் செய்யும் செயல்களில் குற்றவியல் நோக்கம் இருக்க முடியாது என்பதை வலியுறுத்தி, திருச்சி அமர்வு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு 2018ஆம் ஆண்டு திருச்சி அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 84-ஐ மேற்கோள்காட்டி முக்கிய தீர்ப்பை வழங்கினர்.
ஐபிசி பிரிவு 84-ன் படி, மனநலம் குன்றிய நிலையில் ஒருவர் செய்யும் செயல் சட்டத்தின் பார்வையில் குற்றமாக கருதப்படாது. தான் செய்வது சட்டத்திற்கு புறம்பானது என்பதை உணர முடியாத மனநிலையில் இருந்தால், அவரிடம் குற்ற நோக்கம் இருப்பதாகக் கருத முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மனநிலை பிறழ்வு இருப்பதாக தெரியவந்தால், அவரை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயம் என்றும், மனநல மருத்துவமனையிடம் இருந்து உரிய மருத்துவ அறிக்கையைப் பெறுவதை உறுதி செய்வது விசாரணை நீதிமன்றத்தின் கடமை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
அந்த மருத்துவ அறிக்கையை முழுமையாக பரிசீலித்த பின்னரே, குற்றம் சாட்டப்பட்டவர் ஐபிசி பிரிவு 84-ன் கீழ் சலுகை பெற தகுதியானவரா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் வழங்கப்பட்ட தண்டனை செல்லாது எனக் கூறிய நீதிபதிகள், திருச்சி நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகளை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ