Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 ஜூன் (ஹி.ச.)
நீட் மறு தேர்வுக்கான ஏற்பாடுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி, மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,
மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த ஒரு மாணவர் கடந்த ஒரு மாதமாக நீட் மறு தேர்வுக்காக தீவிரமாகத் தயாராகி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்வுக்கு முந்தைய நாளில் அனுமதிச் சீட்டை (Admit Card) பதிவிறக்கம் செய்தபோது, அவரது தேர்வு மையம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் ஒதுக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக தெரிவித்துள்ளார்.
அந்த மாணவரிடம் பாஸ்போர்ட் இல்லாததோடு, வெளிநாடு சென்று தேர்வு எழுதும் பொருளாதார வசதியும் குடும்பத்திற்கு இல்லை என்பதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஒரு மாணவருக்கு தனது சொந்த நகரத்தில்கூட தேர்வு மையம் ஒதுக்க முடியாத அமைப்பு, வெளிநாட்டில் மையம் ஒதுக்கியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், தேசிய தேர்வு முகமை (NTA) மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் சோதனைக்கு உள்ளாக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இது கல்வி முறை அல்ல; ஒரு தலைமுறையின் பணம், நேரம் மற்றும் மனநிம்மதியை பறிக்கும் செயலாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, மாணவர்கள் பொறுப்பான, உணர்வுபூர்வமான மற்றும் வெளிப்படையான கல்வி மற்றும் தேர்வு முறைக்கு தகுதியானவர்கள் என்றும், அதனை உறுதி செய்வதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P