Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 20 ஜூன் (ஹி.ச.)
கடந்த 17-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (20) மற்றும் சதீஷ் (22) ஆகியோர், ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிந்தாங்கல் கிராமப் பகுதியில் நடைபெற்ற நாடக நிகழ்ச்சியைப் பார்வையிட்டு, இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, வழிமறித்த மூன்று மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடமிருந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் பானாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சம்பவத்துடன் தொடர்புடையதாக அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (17) மற்றும் ஜெகதீசன் (25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து வழிப்பறியில் பறிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN