Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 21 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பாக 3 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைக்க தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குழு, வாயு கசிவு ஏற்பட்டதற்கான காரணங்கள், பாதுகாப்பு நடைமுறைகளில் ஏற்பட்ட குறைபாடுகள், சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் குழு 24 மணி நேரத்திற்குள் முதற்கட்ட அறிக்கையையும், 3 நாட்களுக்குள் விரிவான இறுதி அறிக்கையையும் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற தொழிற்சாலை விபத்துகள் மீண்டும் நிகழாத வகையில் தேவையான பாதுகாப்பு பரிந்துரைகளையும் குழு வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.24 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் அரசு செலவில் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம், தொழில்துறை பாதுகாப்புத் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக பின்பற்றச் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam