Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 21 ஜூன் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டிவலசு பகுதியில் கடந்த 18ஆம் தேதி சரஸ்வதி என்பவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, இரண்டு இளைஞர்கள் வீடு வாடகைக்கு கிடைக்குமா என்று கேட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, சம்பவம் குறித்து எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது மௌனீஷ் மற்றும் குருவிக்னேஷ் என்ற இரண்டு இளைஞர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும், பறிக்கப்பட்ட 5 பவுன் தங்கச் சங்கிலியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடப்பாடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN