Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூன் (ஹி.ச.)
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் யோகா பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
உடல் நலத்தையும் மன அமைதியையும் வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டங்களில் பொதுமக்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பெருந்திரளாக பங்கேற்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை நெல்லையில் உள்ள சங்கீத சபா அரங்கில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
யோகாவின் முக்கியத்துவம் குறித்து அவர் அங்கு உரையாற்றினார்.
பாரம்பரிய சிற்பங்களுக்கு பெயர் பெற்ற மாமல்லபுரத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கடற்கரை கோயில் பின்னணியில் நூற்றுக்கணக்கானோர் ஒருங்கிணைந்து யோகா செய்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
கோவையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஆளுநர் அர்லேகர் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை மேற்கொண்டார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து அவர் யோகாசனங்களை செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதேபோல் புதுச்சேரி கடற்கரை சாலையில் இன்று காலை நடைபெற்ற யோகா தின நிகழ்வில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு பல்வேறு ஆசனங்களை செய்தனர்.
கடற்கரையின் இயற்கை சூழலில் நடைபெற்ற இந்த நிகழ்வு பங்கேற்பாளர்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தது.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிகளில் மக்கள் திரளாக பங்கேற்று சர்வதேச யோகா தினத்தை அர்த்தமுள்ளதாக்கினர்.
Hindusthan Samachar / vidya.b