Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 21 ஜூன் (ஹி.ச.)
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கோபி ராசிபுரம் பகுதியில் செயல்படாத தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கிணற்றில் பெண் ஒருவரின் அழுகிய சடலம் மீட்கப்பட்ட வழக்கில், அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 17-ஆம் தேதி மன்னாரங் கம்பெனி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், உயிரிழந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா தேவி (27) என்பதும், அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாஸ்கர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அதில், சங்கீதா தேவியின் கணவர் சோட்டாலால் மண்டல், மனைவியின் பல்வேறு தொடர்புகள் தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறால் ஆத்திரமடைந்திருந்தது தெரியவந்தது.
திருச்சியில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்த அவர், பின்னர் அன்னூர் பகுதியில் நடைபெற்று வந்த தொழிற்சாலை புனரமைப்புப் பணிக்காக வந்திருந்தார்.
சம்பவத்தன்று கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், சங்கீதா தேவி அணிந்திருந்த சால்வையால் கழுத்தை நெரித்து சோட்டாலால் மண்டல் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் உடலை சாக்குப்பையில் கட்டி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கிணற்றில் வீசி விட்டு, சொந்த ஊரான பீகாருக்கு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் சோட்டாலால் மண்டலை கைது செய்து, அவர்மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P