Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 21 ஜூன் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் இன்று கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
சிலம்பம் நிகழ்ச்சி, கண் மருத்துவ முகாம் மற்றும் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர், பின்னர் சங்கரன்கோவில் தாலுகா அச்சம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கபடி போட்டியை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜீவ்,
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான்.
அந்த ஆலை மீண்டும் திறக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், மாணவர்களின் உடல் மற்றும் மனநல வளர்ச்சிக்கு விளையாட்டு மிகவும் அவசியமானது என்றார்.
கடந்த காலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டிற்கான நேரம் உரிய அளவில் வழங்கப்படவில்லை என்றும், தற்போதைய ஆட்சியில் அதுபோன்ற நிலை ஏற்பட அனுமதிக்கப்படாது என்றும் கூறினார்.
தற்போது மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அதிலிருந்து இளைஞர்களை மீட்டெடுக்க விளையாட்டை ஊக்குவிப்பது முக்கியமான நடவடிக்கையாகும் என்றார்.
மாணவர்கள் அதிகளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மாணவர்கள் அதிக நேரம் மொபைல் போன்களை பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றும், அதிலிருந்து விலகி விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ராஜீவ் அறிவுறுத்தினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P