Enter your Email Address to subscribe to our newsletters

கோவை , 21 ஜூன் (ஹி.ச.)
கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் (சிடிடிஏ) சார்பில் நடத்தப்பட்ட 2026-ஆம் ஆண்டுக்கான கிளப்புகளுக்கு இடையேயான லீக் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா,
நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பாரதியார் அரங்கில் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்க முன்னாள் தலைவர் மற்றும் புகழ்பெற்ற டென்னிஸ் நிர்வாகி ரமேஷ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
1977-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க டேவிஸ் கோப்பை போட்டியைத் தொடர்ந்து, 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கிளப்புகளுக்கு இடையேயான லீக் போட்டி, இந்த ஆண்டுடன் தொடர்ந்து 48-ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளது.
கோவை, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் நீலகிரி பகுதிகளைச் சேர்ந்த 1,117 வீரர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான வீரர்கள் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய சங்கச் செயலர் சதீஷ் குமார் நாயர்,
கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக டென்னிஸ் விளையாட்டின் வளர்ச்சியில் சங்கம் முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவித்தார்.
கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) அங்கீகாரம் பெற்ற ஏழு போட்டிகள் நடத்தப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு போட்டிகளுக்கு சிடிடிஏ நேரடி ஆதரவு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
பரிசளிப்பு விழாவை தொடர்ந்து, வீரர்கள், கிளப் பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் டென்னிஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கப்பட்டது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA