Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 21 ஜூன் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியிருப்பதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் அரவைக்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதமே இந்த இழப்புக்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் கடின உழைப்பில் விளைவித்த நெற்பயிர்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத வேளாண்மைத் துறை அமைச்சர், தற்போது ஆய்வு என்ற பெயரில் நாடகமாடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மேட்டூர் அணை திறக்கப்படாததால் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கொள்முதல் நிலையங்களில் தேங்கியிருந்த நெற்பயிர்களும் மழையில் நனைந்து வீணாகியிருப்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்திருப்பதுடன், அரசுக்கும் கணிசமான நிதியிழப்பை ஏற்படுத்தியுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எனவே, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் மழையில் நனைந்து சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், திறந்தவெளி நெல்கொள்முதல் நிலையங்களில் நீண்டகாலமாக தேங்கியுள்ள நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசையும் முதலமைச்சர் ஜோசப் விஜயையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P