Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 22 ஜூன் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழாவை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நடராஜப் பெருமானுக்குரிய முக்கிய விழாக்களில் ஒன்றான ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, இன்று கோயிலின் ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு பிரம்மாண்டமான முறையில் திருமஞ்சனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதிகாலை முதல் தொடங்கிய அபிஷேகத்தில் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் பயன்படுத்தப்பட்டன.
வேத மந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை செய்து அபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஆனி மாத உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் இந்த திருமஞ்சனத்தை காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலில் குவிந்திருந்தனர்.
பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்து, தென்னாடுடைய சிவனே போற்றி என கோஷமிட்டனர்.
விழாவையொட்டி கோயில் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
Hindusthan Samachar / vidya.b