Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 22 ஜூன் (ஹி,ச.)
கோவை மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய 6 வயது சிறுவன் அபிஷேக் கொலை வழக்கில் சிறுவனின் தாயான திவ்யா மற்றும் அவரது ஆண் நண்பர் ராஜதுரை ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிபதி விவேகானந்தன் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.
வழக்கின் விசாரணையில், சிறுவன் அபிஷேக் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட திவ்யா மற்றும் ராஜதுரை ஆகியோரை குற்றவாளிகள் என ஜூலை 17 ஆம் தேதி நீதிமன்றம் அறிவித்தது.
இவ்வழக்கில் இன்று தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி, இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பதாக தெரிவித்தார்.
தீர்ப்பில் முக்கிய அம்சமாக, ராஜதுரை முதலில் 13 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், அதன் பிறகே ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், தாய் திவ்யா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை முடித்த பிறகு ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த தண்டனைகள் ஏக காலத்தில் அனுபவிக்கும் வகையில் அல்ல என்றும், ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி விவேகானந்தன் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தினார்.
2020 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. சுமார் 6 ஆண்டுகால விசாரணைக்கு பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் எச்சரிக்கையாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b