Enter your Email Address to subscribe to our newsletters



சென்னை, 23 ஜூன் (ஹி.ச)
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தங்கள் சொந்தக்காரர்களைக் கூட ஆளுநர் பதவியில் அமர்த்தலாம் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருப்பது பொறுப்பற்ற மற்றும் அவதூறான கருத்தாகும்” என தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இத்தகைய செயல்கள் சாத்தியமில்லை என்றும், நாட்டின் உயரிய பதவிகளில் இருப்பவர்களை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
மேலும், “கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தேசிய தலைவர்களை குறித்து பொய்யான மற்றும் முறையற்ற கருத்துகளை கூறுவது தவெக கூறிய மாற்று அரசியலா அல்லது தூற்று அரசியலா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், தமிழகத்தில் தற்போதைய ஆட்சிக் காலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், அமைச்சர்கள் பொதுவெளியில் பொறுப்புடன் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இல்லையெனில், இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகளுக்கு அரசியல் ரீதியாக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஹெச். ராஜா தனது பதிவில் எச்சரித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ