Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)
காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் 2021 தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
இந்த வழக்கு, 2021 சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் பெற்ற வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட வி. ராமு தாக்கல் செய்த தேர்தல் மனுவை தொடர்புடையது.
நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, துரைமுருகன் தரப்பில், தேர்தல் வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்படாத நிலையில் அந்த மனு சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்றும், எனவே அதை நிராகரிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இதற்கு எதிராக ராமு தரப்பில், “ஊழல் நடவடிக்கை நடந்ததாக நாங்கள் கூறவில்லை. வாக்கு எண்ணிக்கை நடைமுறை சரியாக பின்பற்றப்பட்டதா என்பது நீதிமன்ற விசாரணையின் மூலம் மட்டுமே தீர்மானிக்கப்பட முடியும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துரைமுருகன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை பின்னர் வழங்குவதற்காக தள்ளிவைத்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ