Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 23 ஜூன் (ஹி.ச.)
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா அருகே உள்ள நீலேஸ்வரம் சந்திப்பில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட
20-க்கும் மேற்பட்டோர் பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது, மணல் பாரம் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்திற்குள் புகுந்து அங்கிருந்தவர்களின் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த பலர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்புப் படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பொதுமக்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிக வேகத்தில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P