Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 23 ஜூன் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென பெய்த கனமழையால் பல நெல் மூட்டைகள் முழுமையாக நனைந்து சேதமடைந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நுகர்பொருள் வாணிபக் கழகம், உதவி தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் சின்னதுரை மற்றும் கண்காணிப்பாளர் பழனிசாமி ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும், இந்த நடவடிக்கைக்கு கும்பகோணம் பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நெல் மூட்டைகள் சேதமடைந்ததற்கு அடிமட்ட பணியாளர்கள் மட்டுமே காரணம் அல்ல என்றும், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கும் மேல்மட்ட அதிகாரிகளின் பொறுப்பும் இதில் உள்ளதாகவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், கீழ்மட்ட ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது கண்துடைப்பு நடவடிக்கையாக இருப்பதாகவும், உண்மையான பொறுப்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி பொறுப்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN