Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)
சென்னை சித்தலபாக்கம் அருகே பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை என கூறி வந்த +2 மாணவர், பெற்றோர் கண்டித்ததைத் தொடர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அஸ்தினாபுரம் திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனின் மகன் மோனிஷ் (17), மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை பிரிந்து சென்ற நிலையில், தாய் லட்சுமி வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மாணவர் மோனிஷ், பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை என தொடர்ந்து தாயிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தாய் பள்ளிக்குச் செல்ல வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு பல பள்ளிகளில் படித்த மோனிஷ், சமீபத்தில் மேடவாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தார்.
எனினும், பள்ளிக்குச் செல்லாமல் வெளியே சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தாய் மற்றும் சகோதரர் அவரை கண்டித்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோனிஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
வேலை முடித்து வீடு திரும்பிய தாய் லட்சுமி, மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த சித்தலபாக்கம் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ