Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 23 ஜூன் (ஹி.ச.)
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள எரிவாயு நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தைச் சேர்ந்த பபித் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
கத்தாரில் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்த இவர், ராஸ் லஃப்பான் பகுதியில் உள்ள எரிவாயு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்றும், மேலும் பலர் படுகாயமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஸ் லஃப்பான் தொழிற்சாலை பகுதி, கத்தாரின் முக்கிய எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையமாகும். இங்கு ஏராளமான இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து கத்தார் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த பபித்தின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய தூதரகம் மேற்கொண்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b