காவிரி ஆற்றுமணலில் உடலை புதைத்து விவசாயிகள் போராட்டம்
திருச்சி, 23 ஜூன் (ஹி.ச) கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர்
Farmers Protest


திருச்சி, 23 ஜூன் (ஹி.ச)

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி மாம்பழச்சாலை அருகே உள்ள காவிரி ஆற்றுமணலில் இந்த போராட்டம் நடைபெற்றது.

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக குற்றம்சாட்டிய விவசாயிகள், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு அணைத் திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாயிகள் தங்களது உடலை காவிரி ஆற்றுமணலில் புதைத்துக் கொண்டு நூதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த போராட்டம் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கவனத்தை ஈர்த்தது.

மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் காவிரி நீரின் அளவு பாதிக்கப்படும் என்றும், இதனால் டெல்டா மாவட்ட விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN