Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களிடம் தரிசனம் மற்றும் பல்வேறு சேவைகளுக்காக கட்டணம் வசூலிப்பதையும், அந்தக் கட்டணங்களை மேலும் உயர்த்தும் முயற்சியையும் தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ் கடவுள் முருகனின் இரண்டாம் படைவீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஆன்மிகத் தலமாகும் என்றும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கோயிலின் வருவாயை உண்டியல், கோயில் நிலங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் மூலம் பெற முடியும் நிலையில், இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தெரிவித்துள்ளார்.
கோயிலில் தற்போது விஸ்வரூப தரிசனம், அபிஷேகம், யாகசாலை தரிசனம், விரைவு தரிசனம் உள்ளிட்ட சேவைகளுக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், மேலும் தங்க ரத உலா, சண்முகார்ச்சனை மற்றும் அபிஷேக தரிசன கட்டணங்களை பல மடங்கு உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணவீக்கம் மற்றும் நிர்வாகச் செலவினங்களை காரணம் காட்டி கட்டணங்களை உயர்த்துவது பக்தர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும், திருக்கோயில்களை வருவாய் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல நடத்தக் கூடாது என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
முருகனை தரிசிப்பதற்காக வரும் பக்தர்களிடம் எவ்வித தரிசனக் கட்டணமும் வசூலிக்காமல், அனைவருக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
Hindusthan Samachar / P YUVARAJ