Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முதலமைச்சர் விஜய் காட்டிய சைகை இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு, தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில்,
தமிழ்நாடு சட்டப்பேரவை விதிப்படியும் மரபு படியும் பேரவையில் இல்லாத ஒருவரை பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சட்டமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ அல்லது உடல் மொழியாகவோ விமர்சனமோ அல்லது கிண்டலோ, கேலியோ செய்யக்கூடாது என்பது சட்டப் பேரவை தலைவருக்கு தெரிந்திருக்கும்.
இது தொடர்பாக 22.6.2026 அன்று சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உடல் மொழியாக அல்லது வாய்மோழியாக யாரையும் கிண்டலும், கேலியும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்த அடுத்த நாளே, (23.6.2026) இதே போல் வாய்மொழியாகவும், உடல் மொழியாகவும் அவையில் இல்லாத (முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்) குறித்து தமிழக முதலமைச்சர் கிண்டலும், கேலியும் செய்தது அவை உரிமை மீறல் இல்லையா ?
அவ்வாறான செயலில் ஈடுபட்ட முதல்வர் மீது தாமாக முன்வந்து அவை உரிமை மீறல் நடவடிக்கையை பேரவைத் தலைவர் எடுப்பாரா? தானே முதலமைச்சருக்கு இதுபோல் செயல்பட அனுமதித்து நியாயமா? பதிலை எதிர்பார்த்து தமிழ்நாடே காத்திருக்கிறது பேரவை தலைவர் அவர்களே என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN