Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 24 ஜூன் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே
போடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அரியப்பன், திமுக விவசாய அணி மாநில துணைச் செயலாளராக உள்ளார்.
அவரது இளைய மகன் அன்பானந்தம், திமுகவின்
GEN Z ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினராகவும், சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருபவராகவும் கூறப்படுகிறார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தொடர்பாக விமர்சன கருத்துக்களுடன் அன்பானந்தம் வீடியோ பதிவு வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் தலைமையில், காவல் ஆய்வாளர் சசிகலா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீசார் நள்ளிரவு 12.30 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்று விசாரணைக்காக அன்பானந்தத்தை அழைத்துச் செல்ல முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, அன்பானந்தம் பெங்களூருவில் பணிபுரிந்து வருவதால் வீட்டில் இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும், வாரண்ட் இல்லாமல் நள்ளிரவில் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்துவது ஏன் என போலீசாரிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பனஹள்ளி திமுக எம்.எல்.ஏ. சீனிவாசன், எந்த வழக்கின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது, யார் புகார் அளித்துள்ளனர் என போலீசாரிடம் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சிறிது நேரம் போலீசாருக்கும் திமுக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அன்பானந்தம் இல்லாததை உறுதி செய்த பின்னர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
முதல்வரை விமர்சித்ததற்காகவே அன்பானந்தத்தை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam