Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூன் (ஹி.ச)
சென்னை மாநகரின் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள 95.81 லட்சம் டன் கழிவுகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் தேங்கியுள்ள கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
வழக்கு விசாரணையின் போது, பெருங்குடியில் 29,28,398 மெட்ரிக் டன் கழிவுகளும், கொடுங்கையூரில் 66,52,506 மெட்ரிக் டன் கழிவுகளும் தேங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது.
ஆனால், இந்த 95.81 லட்சம் டன் கழிவுகளை எவ்வாறு கையாள்வது, அவற்றை அகற்றுவதற்கான காலக்கெடு என்ன என்பது தொடர்பாக மாநகராட்சியிடம் உறுதியான செயல் திட்டம் எதுவும் இல்லை என பசுமைத் தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்தது.
இதையடுத்து, குப்பைக் கழிவுகளை அகற்ற இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுவது, உயிரி சுரங்கம் (Bio-mining) உள்ளிட்ட திட்டங்களை விரைவுபடுத்துவது, அவற்றை அகற்ற தேவையான காலக்கெடுவை நிர்ணயிப்பது போன்ற அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து வரும் ஜூன் 29-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்றாக கருதப்படும் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிர கவனத்தை பெற்றுள்ளன.
Hindusthan Samachar / P YUVARAJ