Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)
மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாக அமையும் எனக் கூறியுள்ளார்.
தனியார் மயமாக்கல் நடைமுறையால் தொழிலாளர்கள் நிரந்தர வேலையின்மை, வருமான இழப்பு மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் அபாயம் இருப்பதாகவும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ESI, PF உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு மற்றும் பணிப்பாதுகாப்பு வசதிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊதியப் பாதுகாப்பு குறைவு, பணியிடப் பாதுகாப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகளும் உருவாகக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் சுகாதாரத்திற்கும், நகரங்களின் தூய்மைக்கும் முக்கிய பங்காற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பது அரசின் கடமை என வலியுறுத்தியுள்ள பிரேமலதா விஜயகாந்த், தற்போது பணியாற்றி வரும் ஒப்பந்த மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றுவதோடு, அவர்களின் ஊதியத்தையும் உயர்த்த தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
“சுத்தம் தான் சோறு போடும்” என்ற பழமொழிக்கேற்ப, சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக தினந்தோறும் கடினமாக உழைத்து வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு துணை நிற்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ