Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க நிர்வாகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல ஆண்டுகளாக மாநகராட்சியில் நேரடி ஊழியர்களாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
தனியார்மயமாக்கல் மூலம் ஊதிய குறைப்பு, பணி நிரந்தரமின்மை மற்றும் ஏற்கனவே உள்ள சலுகைகள் பறிக்கப்படும் சூழல் உருவாகும் என்று பணியாளர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த நிலையில், பணியாளர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் அல்லது வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களை நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதனையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி அலுவலகம் மற்றும் முக்கிய சந்திப்புகளில் முன்னெச்சரிக்கையாக பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், தூய்மைப் பணி என்பது அத்தியாவசிய சேவை. எங்கள் கோரிக்கைகள் குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எங்களை கலந்தாலோசிக்காமல் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சேவையின் தரத்தை மேம்படுத்தவும், நவீன கருவிகளை பயன்படுத்தவும் இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்படுகிறது. பணியாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும், பேச்சுவார்த்தைக்கு அரசு முன்வராவிட்டால் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என பணியாளர்கள் அறிவித்துள்ளதால், அடுத்த சில நாட்களில் நிலைமை மேலும் பரபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b