Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 24 ஜூன் (ஹி.ச.)
சென்னையில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் வீ.களத்தூர் நோக்கி 18 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் வேன், இன்று அதிகாலை விழுப்புரம் புறவழிச்சாலையில் வழுதரெட்டி அருகே விபத்துக்குள்ளானது.
வேன் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது முன்பக்க டயர் திடீரென வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் பயணித்தவர்களில் 8 பேர் படுகாயமடைந்தனர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காயமடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனைய பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வேனின் வேகம், டயரின் நிலை மற்றும் ஓட்டுநரின் கவனக்குறைவு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புறவழிச்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் வேன் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரானது.
நீண்ட தூர பயணங்களுக்கு முன் வாகனங்களை முறையாக பரிசோதிக்க வேண்டும் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b