ஆந்திராவில் பொருளாதார மந்த நிலை நோக்கி செல்கிறதா? –ஜெகன் மோகன் ரெட்டி கடும் விமர்சனம்
அமராவதி, 25 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசம் பொருளாதார மந்தநிலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், ட்வாக்ரா பெண்கள் குழுக்களுக்கு வழங்க வேண்டிய வட்டி சலுகை திட்டத்தை அரசு முற்றிலும் நிறுத்தி வைத்திருப்பதாகவும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்
A


அமராவதி, 25 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசம் பொருளாதார மந்தநிலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், ட்வாக்ரா பெண்கள் குழுக்களுக்கு வழங்க வேண்டிய வட்டி சலுகை திட்டத்தை அரசு முற்றிலும் நிறுத்தி வைத்திருப்பதாகவும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

தேர்தல் நேரத்தில் ட்வாக்ரா கடன்களுக்கு வட்டி சலுகை அளவை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்துவதாக அரசு வாக்குறுதி அளித்திருந்தது என்றும், ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதி கைவிடப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தனது ஆட்சிக் காலத்தில் ட்வாக்ரா சுய உதவிக் குழு பெண்களுக்கு ரூ.4,969 கோடி வரை வட்டி சலுகை வழங்கப்பட்டதுடன், “ஆசரா” மற்றும் “செயூதா” உள்ளிட்ட திட்டங்கள் மூலம் பெண்களுக்கு நிதி பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அரசு பதவியேற்ற பின்னர் 2024–25 நிதியாண்டில் வட்டி சலுகைக்காக ஒரு ரூபாய்கூட விடுவிக்கப்படவில்லை என்றும், 2025–26 மற்றும் 2026–27 பட்ஜெட்டுகளில் தலா ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தாலும் அந்த நிதி நடைமுறையில் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ட்வாக்ரா பெண்களுக்கு சுமார் ரூ.6,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதே வேளை, ஆந்திரப் பிரதேசத்தில் ட்வாக்ரா கடன் வளர்ச்சி குறைந்துள்ளதையும், 2025–26ல் மாநில வரி வருவாய் வளர்ச்சி -3.22 சதவீதமாக பதிவாகியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டி, இது பொருளாதார சரிவின் அறிகுறி என எச்சரித்துள்ளார்.

கிராமப்புற பெண்கள் குழுக்களை புறக்கணித்தால் மாநில பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்றும், நிலுவை வட்டி சலுகை தொகைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA