Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)
அறப்போர் இயக்கம் சார்பில் கல்வித்துறை அமைச்சர் மற்றும் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜ் மோகனை நேரில் சந்தித்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள குடியிருப்புகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவான மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சென்னை புரசைவாக்கம் திடீர் நகர் பகுதியில் வசிக்கும் சுமார் ஆயிரம் குடும்பங்கள் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி குறுகிய வீடுகளில் பல ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், அவர்களுக்கு அவர்கள் வசிக்கும் அதே இடத்தில் அரசு சார்பில் புதிய வீடுகள் கட்டித் தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
அதேபோல், புளியந்தோப்பு கே.பி. பார்க் குடியிருப்பு கட்டுமானத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, தரமற்ற கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
.இது தொடர்பாக 2021ஆம் ஆண்டிலேயே லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் கே.பி. பார்க் குடியிருப்புகளில் சுவர்கள் உதிர்தல், மின்தூக்கி கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து நிலவி வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் நாள்தோறும் பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் ராஜ் மோகன் மனுவை பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ