Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவர் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கு தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை வேலூருக்கு மாற்ற வேண்டும் என்று கோரி துரைமுருகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது,
சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதாக துரைமுருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மாற்ற மனுவை தொடர விருப்பமில்லை என்றும், அதை வாபஸ் பெற அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதன் மூலம், சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு முடிவுக்கு வந்துள்ளது.
அதே நேரத்தில், சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை தொடர்பான விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் அங்குள்ள உத்தரவுகளைப் பொறுத்தே அமையும் என சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / P YUVARAJ