Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலு வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அதுகுறித்து திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
எ.வ. வேலு சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், சட்டப்படி அந்த வழக்கை எதிர்கொண்டு நீதிமன்றத்தில் தனது தரப்பு நியாயத்தை நிரூபிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் இதுவரை எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை என்பதே வரலாறு என தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஆளும் கட்சியினரின் மிரட்டல்களுக்கு அஞ்சும் இயக்கம் திமுக அல்ல என்றும், இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே திமுக சந்தித்துள்ளதாகவும், தற்போதைய சூழலையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் என்றும் மு.க. ஸ்டாலின் தனது பதிவில் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P