Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 25 ஜூன் (ஹி.ச.)
திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் பல்வேறு அரசியல் மற்றும் காவிரி நீர் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.
பேச்சின் போது, மதிவாணன் கொள்கைப் பற்றுள்ள தலைவர் எனக் குறிப்பிட்ட அவர்,
“இக்கரைக்கு அக்கரை பச்சை” என்ற பழமொழியை எடுத்துக்காட்டாக கூறி, ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்துக்குச் செல்பவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றமடையும் சூழல் குறித்து பேசினார்.
நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, பொதுவாகத்தான் கூறுகிறேன் என்றும் விளக்கமளித்தார்.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்த அவர்,
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்டாலினை சந்தித்தேன். தேர்தலுக்குப் பிறகு பார்க்கவில்லை.
ஆனால் முந்தையபடி அதே அன்புடனும் உபசரிப்புடனும் பழகினார் என்றார்.
யாரும் யாரையும் காணாமல் அடித்துவிட முடியாது எனக் கூறிய அவரது கருத்து விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவிரி நீர் பிரச்சினை குறித்தும் கவலை தெரிவித்த முத்தரசன்,
கடந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் டெல்டா பகுதியில் சாகுபடி சிறப்பாக நடைபெற்றதாகவும், இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால் மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படாத நிலை விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளதாகவும் கூறினார்.
கர்நாடகா மாநிலம் மேலும் ஒரு அணை கட்டத் திட்டமிட்டுள்ளதாக தகவல் இருப்பதாகவும், இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக, மணமக்கள் உழைப்பின் மகத்துவத்தை உணர்ந்து வாழ வேண்டும் என்று வாழ்த்தி தனது உரையை நிறைவு செய்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam