சென்னையில் ரூ.284 கோடி நடைபாதை திட்ட டெண்டர்கள் ரத்து - முறைகேடு புகாரால் மாநகராட்சி நடவடிக்கை
சென்னை, 26 ஜூன் (ஹி.ச.) சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரூ.284 கோடி மதிப்பீட்டில் நடைபாதைகள் அமைக்கும் திட்டத்திற்காக வெளியிடப்பட்ட 35 டெண்டர்களை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. திட்டச் செலவு செயற்கையாக உயர்த்தப்பட்டதாகவும், குறிப்பிட்ட
Cor


சென்னை, 26 ஜூன் (ஹி.ச.)

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரூ.284 கோடி மதிப்பீட்டில் நடைபாதைகள் அமைக்கும் திட்டத்திற்காக வெளியிடப்பட்ட 35 டெண்டர்களை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. திட்டச் செலவு செயற்கையாக உயர்த்தப்பட்டதாகவும், குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக டெண்டர் நிபந்தனைகள் வடிவமைக்கப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விரிவான திட்ட அறிக்கையில் (DPR) தேவையற்ற பணிகள் சேர்க்கப்பட்டதால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அனைத்து டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டு, திட்டம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், திட்டத்திற்கான செலவுகள் வழக்கத்தை விட சுமார் நான்கு மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஏல நடைமுறையின் போது கூடுதலாக 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதாகவும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், மேயர் பிரியா இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 20-ஆம் தேதி டெண்டர்கள் வெளியிடப்பட்டன.

ஆனால் அதற்குள் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், குறைந்தபட்ச ஏலதாரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் பணிக்கான ஆணைகள் வழங்கப்படவில்லை.

பொதுவாக இரண்டு அல்லது மூன்று சாலைகளுக்கான நடைபாதை பணிகளை உள்ளடக்கிய ஒவ்வொரு தொகுப்பிற்கும் ரூ.8 கோடி முதல் ரூ.9 கோடி வரை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நடைபாதை அமைக்கும் பணிகளுக்கு பெரும்பாலும் கொத்துவேலை மற்றும் கான்கிரீட் சமன்படுத்தல் மட்டுமே தேவைப்படுவதால், ஒரு திட்டத்திற்கு ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை மட்டுமே செலவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திட்டத்திற்கு மாநில அரசின் ஒப்புதல் ஏற்கனவே கிடைத்துள்ளதால் அது கைவிடப்படவில்லை என்றும், டெண்டர்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

விரிவான திட்ட அறிக்கை மறுஆய்வு செய்யப்பட்டு, திருத்தப்பட்ட மதிப்பீட்டுடன் புதிய டெண்டர்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ