கரூரில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நிறைவு- ஹார்ட் டிஸ்க், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்
கரூர், 26 ஜூன் (ஹி.ச.) முன்னாள் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலுவுக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையின் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது.
வேலு


கரூர், 26 ஜூன் (ஹி.ச.)

முன்னாள் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலுவுக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையின் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது.

கரூர் பழனியப்பா தெருவில் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி. சங்கர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகம், சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திக் வீடு, பள்ளப்பட்டி ஆசாத் நகரில் பொதுப்பணித்துறை உதவி கோட்ட செயற்பொறியாளர் ரபிக் வீடு உள்ளிட்ட இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

மேலும், காந்திகிராமத்தில் வசிக்கும் சென்னையில் நெடுஞ்சாலைத்துறை கூடுதல் கோட்டப் பொறியாளராக பணியாற்றும் கார்த்திக் வீடு மற்றும் கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் சுரேஷின் அலுவலகம் உள்ளிட்ட மொத்தம் ஆறு இடங்களில் சோதனை நடைபெற்றது.

காலை தொடங்கிய சோதனை மாலை நிறைவடைந்த நிலையில், ஹார்ட் டிஸ்க், முக்கிய ஆவணங்கள் மற்றும் சில ஆதாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை லஞ்ச ஒழிப்புத் துறை இதுவரை வெளியிடவில்லை.

Hindusthan Samachar / GOKILA arumugam