Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 26 ஜூன் (ஹி.ச)
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகே மேல முன்னீர் பள்ளத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 43). இவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் வீட்டின் சுவரில் நேற்று மாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பேச்சிமுத்துவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே நில பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதனிடையே அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த காட்சிகளில் மேல முன்னீர்பள்ளத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் சிறை ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது பதிவாகி இருந்தது.
அந்த காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் அந்த 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வந்தனர். அதில் செல்வகுமார் (24) என்பவர் கைது செய்யப்பட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN