Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 26 ஜூன் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணியூர் பகுதியில் இருசக்கர வாகனமும் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களான தினேஷ் (26), சபரி (25), பிரகாஷ் (28) மற்றும் குணசேகரன் (18) ஆகிய நான்கு பேரும் இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் கணியூர் வழியாக மடத்துக்குளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கணியூர் ஆஸ்பத்திரி மேடு பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற சொகுசு கார் ஒன்றை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் மடத்துக்குளத்திலிருந்து கணியூர் நோக்கி வந்த லாரி மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் செல்லும் வழியில் தினேஷ், சபரி மற்றும் பிரகாஷ் ஆகிய மூவரும் பரிதபமாக உயிரிழந்தனர்.
குணசேகரன் படுகாயங்களுடன்
உடுமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக கணியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணம் செய்ததும், கார் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN