Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 27 ஜூன் (ஹி.ச)
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி காவல் நிலைய வளாகத்தில் குற்றங்கள் குறைந்து அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கு பணியாற்றும் காவலர்கள் சிலர் ஆடு பலியிட்டதாக கூறப்படுகிறது.
அரசு அலுவலகமான காவல் நிலையத்தில் இதுபோன்ற மூடநம்பிக்கை செயலில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியிலும், காவல்துறை வட்டாரத்திலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த விவகாரம் காவல்துறை உயரதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடைய தீவட்டிப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர், எழுத்தர் வெங்கடாசலம் மற்றும் தலைமைக் காவலர் ரமேஷ் ஆகிய மூவரையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலையம் என்பது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் இடமாகும். அங்கு மூடநம்பிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடாது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இடமாற்றம் செய்யப்பட்ட மூவர் மீதும் துறைரீதியான விசாரணை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b