மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி நியமன சர்ச்சை - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
சென்னை, 27 ஜூன் (ஹி.ச.) மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி நியமனத்தை மறுபரிசீலனை செய்து, வெங்கட நாராயணாவின் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்
Premalatha Vijayakanth condemns


சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி நியமனத்தை மறுபரிசீலனை செய்து, வெங்கட நாராயணாவின் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதை தேமுதிக சார்பில் கடுமையாக கண்டிக்கிறோம்.

ஏற்கனவே கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் அங்குள்ள நீர்வளத்துறை அமைச்சர் “எங்கள் மாநில எல்லைக்குள் மேகதாது அணையை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது” என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக தமிழ்நாடு- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், மேகதாது அணை தொடர்பாகவும் தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உச்ச நீதிமன்றமும், காவிரி மேலாண்மை தொடர்பான அமைப்புகளும் இந்த விவகாரத்தில் சட்ட மற்றும் நிர்வாக வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிலையிலும், கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் உறுதியாக இருப்பதாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது.

இத்தகைய சூழலில், கர்நாடக பின்னணியை கொண்ட ஒருவரை தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது” போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான நபர்கள் பலர் இருக்கையில், ஏன் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

எனவே, தமிழக அரசு இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்து, வெங்கட நாராயணாவின் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம்.

என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b