அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக மாணவர் அணி அறிவிப்பு
தமிழ்நாடு, 28 ஜூன் (ஹி.ச.) தமிழக வெற்றி கழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, திமுக மாணவர் அணி சார்பில் ஜூன் 29-ஆம் தேதி (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்
திமுக


தமிழ்நாடு, 28 ஜூன் (ஹி.ச.)

தமிழக வெற்றி கழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, திமுக மாணவர் அணி சார்பில் ஜூன் 29-ஆம் தேதி (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மாணவர் அணி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோவை அமைச்சர் சரத்குமார் வெளியிட்டதாகவும், அது போதைப்பொருள் ஒழிப்பு நாளன்றே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் அளித்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்றும், Thug Life Moment என்ற தலைப்பில் ரீல்ஸ் வெளியிட்டது இளைஞர்களிடம் தவறான முன்மாதிரியை உருவாக்கும் செயல் என்றும் திமுக மாணவர் அணி விமர்சித்துள்ளது.

எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனுக்கு உகந்ததல்ல என்பதால், அமைச்சர் டி. சரத்குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக, ஜூன் 29-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாக பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சர் விஜயின் திரைப்படப் பாடல்கள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ள திமுக மாணவர் அணி, அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கையில் முதலமைச்சர் புகைப்பிடிப்பது போன்ற டாட்டூ இருப்பதையும் குறிப்பிட்டு, அமைச்சர்களின் இத்தகைய நடவடிக்கைகளை முதலமைச்சர் கண்டித்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P