Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 28 ஜூன் (ஹி.ச.)
இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக சர்வதேச சுகாதார புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்ட இந்த ஆய்வின்படி, 2010-ம் ஆண்டில் 9.7 சதவீதமாக இருந்த சிகரெட் புகைப்பவர்களின் விகிதம், 2025-ம் ஆண்டில் 3.8 சதவீதமாக சரிந்துள்ளது.
உலகளவில் புகையிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 120 கோடியாக இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் சிகரெட் புகைப்பவர்கள் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் சிகரெட் புகைப்பவர்களில் 82 சதவீதம் பேர் ஆண்கள். அதேநேரத்தில் பெண்களிடையே சிகரெட் புகைக்கும் பழக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால், தற்போது உலகளவில் பெண்களில் 2 முதல் 3 சதவீதம் பேர் மட்டுமே சிகரெட் புகைப்பவர்களாக உள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, புகையிலை பயன்பாட்டால் ஆண்டுதோறும் சுமார் 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் 70 லட்சத்திற்கும் அதிகமானோர் நேரடியாக புகைபிடிப்பதாலும், சுமார் 13 லட்சம் பேர் பிறர் வெளியிடும் புகையை சுவாசிப்பதாலும் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகரெட் பயன்பாடு குறைவதற்கு அதன் மீதான தொடர் வரி உயர்வே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. சிகரெட்டின் விலை வாங்கும் திறனைவிட அதிகரித்ததால், பலர் அந்தப் பழக்கத்தை கைவிட்டுள்ளனர். மேலும், புகையிலையால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு, பொது இடங்களில் புகைபிடிப்பதற்கான தடை, அபராதம் உள்ளிட்ட கடுமையான விதிமுறைகளும் இந்த மாற்றத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளன.
ஜி20 நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவுடன் அமெரிக்கா, இத்தாலி, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளிலும் சிகரெட் புகைப்பவர்களின் விகிதம் குறைந்துள்ளது. ஆனால் தென் ஆப்பிரிக்கா மற்றும் சவுதி அரேபியாவில் மட்டும் இந்தப் பயன்பாடு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிகரெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் அரசுகளின் கொள்கைகள் மற்றும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு ஆகியவை இந்த ஆரோக்கியமான மாற்றத்துக்கு முக்கிய காரணங்களாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA