Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 28 ஜூன் (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தமிழ்நாடு–ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள பத்தலபல்லி மலைப்பாதையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன்–தங்கை இருவரும் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தகவலின்படி, ஒரிசா மாநிலத்தில் இருந்து மாட்டு தோல்களை ஏற்றிக்கொண்டு பேரணாம்பட்டு நோக்கி கனரக லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அதே சாலையில் ஆந்திர மாநிலம் பங்காருபேட்டை பகுதியைச் சேர்ந்த அனுஷ்கா மற்றும் அவரது அண்ணன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் அண்ணன்–தங்கை இருவரும் லாரியின் சக்கரத்துக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தமிழக மற்றும் ஆந்திரப் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்து ஆந்திர மாநில எல்லைக்குள் நடைபெற்றது உறுதியானதால், வி.கோட்டா போலீசார் வழக்கை பதிவு செய்து இருவரின் உடல்களையும் மீட்டு பலமனேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழக–ஆந்திர எல்லையில் உள்ள பத்தலபல்லி மலைப்பாதையில் நிகழ்ந்த இந்த கோர விபத்து, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam