Enter your Email Address to subscribe to our newsletters

அரக்கோணம், 29 ஜூன் (ஹி.ச.)
அரக்கோணத்தில் ரயில்வே பணிமனை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் நோக்கி இயக்கப்படும் பல மின்சார ரயில்கள் கணிசமான தாமதத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வரும் பணிகளால், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் தற்போது திருவாலங்காடு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
இதேபோல், எதிர் திசையில் இயக்கப்படும் ரயில்களும் திட்டமிட்ட நேரத்தை விட தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, ரயில்வே கால அட்டவணைப்படி திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய சில மின்சார ரயில்கள், சென்னை புறநகர் பகுதிகளை அடைவதற்கு சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாகி வருகின்றன.
இதனால் தினமும் அலுவலகம், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் சார்ந்த பணிகளுக்காக பயணம் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலை நேர நெரிசல் நேரங்களில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால், பயணிகள் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பலர் தங்களது அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
ரயில் சேவை எப்போது வழக்கமான நிலைக்கு திரும்பும் என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் விரிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், பணிகளை விரைந்து முடித்து சேவையை சீரமைக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ