Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 29 ஜூன் (ஹி.ச.)
கடலுார் அடுத்த நல்லாத்துார், குளத்து மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ராஜி (வயது 27 ) அப்பகுதியில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றார்.
இவரது மனைவி ராஜம். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஹரிஹரன் என்ற ஆண் குழந்தை இருந்தது.
நேற்று காலை ராஜம், தனது குழந்தை ஹரிஹரனுக்கு நல்லாத்துார் துணை சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து போட்டுள்ளார்.
பிறகு குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்து துாங்க வைத்து வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
நேற்று மதியம் 1:00 மணிக்கு குழந்தை திடீரென மயங்கிய நிலையில் இருந்தது.
இதனை கண்டு திடுக்கிட்ட, குடும்பத்தினர், குழந்தையை மீட்டு தூக்கணாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின், மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
டாக்டர், பரிசோதனை செய்ததில் ஹரிஹரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இந்த நிலையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் தூக்கணாம்பாக்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
குழந்தையின் உடல் உடற்கூராய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பின்னரே குழந்தையின் இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, போலியோ சொட்டு மருந்து செலுத்தப்பட்டதற்கும் குழந்தையின் மரணத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b