Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)
மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுப்பதால் பொதுமக்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள், வலி மற்றும் மன உளைச்சலுடன் சிகிச்சைக்காக வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமைதி தேவைப்படும் மருத்துவமனைச் சூழலில் கேமராக்கள் மற்றும் பெரும் கூட்டத்துடன் ரீல்ஸ் எடுப்பது நோயாளிகளுக்கு எந்த வகையிலும் தொந்தரவு ஏற்படுத்தாதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பச்சிளம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வுக்கு ஏன் இத்தனை கேமராக்களும் கூட்டமும் தேவைப்படுகிறது என்றும், விளம்பரத்திற்காக நோயாளிகளின் அமைதியைக் கெடுப்பதுதான் அரசின் சாதனையா என்றும் எஸ்.ஜி.சூர்யா தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் அரசியல் மற்றும் விளம்பர நோக்கிலான நிகழ்வுகள் நடத்தப்படுவது குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ